சங்கீதம் 23 (TCV)

சங்கீதம் 23
தாவீதின் சங்கீதம்.
1யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது.
2அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார்,
அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார்.
3அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார்.
தமது பெயருக்காக அவர் என்னை,
நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே
நான் நடந்தாலும்
நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன்,
ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும்,
எனக்கு ஆறுதல் அளிக்கின்றன.
5என் பகைவர்களின் சமுகத்தில்
நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர்.
நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்;
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும்
நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும்,
நான் யெகோவாவினுடைய வீட்டில்
என்றென்றுமாய் வாழ்வேன்.

Topics in this chapter